தகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்

தகவல்தொழில்நுட்பசட்டமுரண்கள்

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதி விடமுடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்கள் எழுதாமல் விட்டவற்றையெல்லாம் பதிவுலகில் பலரும் எழுதிவருவதைக்காண முடிகிறது.

1. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும்படியாக இருக்கிறதென்றால், நம்முடைய நண்பர்களுக்கு அனுப்புகிறோம்

2. ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் எரிச்சலூட்டினால், உடனே ஒரு பேஸ்புக் நிலைத்தகவல் போடுகிறோம்.

3. ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் விவாதங்களை துவக்குகிறோம்.

இவற்றையெல்லாம் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி செய்து கொண்டிருக்கிற நம்மை ‘இனி இவையெல்லாம் தணிக்கைக்கு உட்படும்’ என்றும், நம்முடைய நடவடிக்கைகள் அனைத்தையும் பலரும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்களென்றும், கண்காணிப்பாளர்களுக்கு பிடித்தவற்றை மட்டுமே நாம் பேச வேண்டுமென்றும் சொன்னால் என்னவாகும்? அதனைத்தான் இந்திய அரசு நிகழ்த்தத் துவங்கியிருக்கிறது.

 கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே கடுமையான சட்டங்களை இயற்றி தனிமனித சுதந்திரத்தையும் கருத்துரிமையினையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. சர்வாதிகார ஆட்சிகளில் தான், சுதந்திரமாக மக்கள் தங்களது கருத்துக்களை பேசுவதும் எழுதுவதும் தடை செய்யப்படும். ஆனால் எதிர்பாராதவிதமாக, இணையத்தை தணிக்கை செய்யப் புறப்பட்டிருக்கிற இந்திய அரசு, அப்படியான ஒரு சூழலைத்தான் உருவாக்கி வருகிறது.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் மீறும் விதமாக இந்திய அரசு பல சட்டத்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது.

 தகவல்தொழில்நுட்பசட்டதிருத்தம்பிரிவு69 (ஆண்டு2008 )

இச்சட்டப் பிரிவின் படி, உயர் அரசு அதிகாரிகளோ, காவல்துறையினரோ எவரொருவரின் அனுமதியுமின்றி, நம்முடைய தொலைபேசி அழைப்புகளை ஒட்டுகேட்கவோ, நமக்கு வருகிற குறுந்தகவல்களையும் மின்னஞ்சல்களையும் படிக்கவோ, நாம் பார்வையிடும் இணையதளங்களை பட்டியல் எடுக்கவோ அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு எந்த நீதிமன்றத்திடமிருந்தும், நீதிபதிகளிடமிருந்தும் அனுமதி வாங்கத் தேவையில்லை.

 முரண்:

“முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல், நாட்டின் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது” என்கிற நம்முடைய அரசியலமைப்பின் “பிரிவு 21” ஐ முற்றிலும் மீறுவதாக இருக்கிறது இச்சட்டத்திருத்தம்.

தகவல்தொழில்நுட்பவிதிமுறைகள்2011

1.நம்முடைய பேஸ்புக் நிலைத்தகவல்களை தணிக்கை செய்யவும் 2 . நமது ஸ்கைப் உரையாடல்களை ஒட்டு கேட்கவும் 3. ட்விட்டரிலும் ப்ளாகிலும் நாம் எழுதுகிறவற்றை முழுவதுமாக கண்காணிக்கவும் 4 . இணையத்தில் இருக்கிற நம்முடைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பார்வையிடவும், 5 . நம்முடைய இருப்பிடத்தை நமது அலைபேசியின் வாயிலாக கண்காணிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. மொத்தத்தில், இணையத்தில் நம்முடைய நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக பிரதியெடுத்து தனிமனித சுதந்திரத்தை, அரசு அதிகாரிகள் கையில் ஒப்படைக்கிறது இச்சட்டம். இணையத்தில் இருக்கிற எதனையும் 36 மணிநேரத்திற்குள் தணிக்கை செய்து மக்களுக்குக் கிடைக்காமல் செய்துவிடும் அதிகாரத்தை அத்தகைய அதிகாரிகளுக்கு வழங்குகிறது இச்சட்டம்.

முரண்:

“பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை” என்கிற நம்முடைய அர சியலமைப்பின் “பிரிவு 19” ஐ முற்றிலும் மீறுவதாக இருக்கிறது இச்சட்டத்திருத்தம். அதோடு மட்டுமின்றி, தனிமனித சுதந்திரத்திற்குள்ளும் மூக்கை நுழைக் கிறது இச்சட்டத்திருத்தம்.

சுயகட்டுப்பாட்டுச்சட்டம்:

இணையம் தணிக்கை செய்யப்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கே தெரியாமல் செய்திட வேண்டும் என்பது தான் இந்திய அரசின் திட்டமாக இருக்கிறது. ஒரு இணையதளத்தையோ அல்லது இணையத்தில் இருக்கிற குறிப்பிட்ட தகவல்களையோ, அதனை உருவாக் கியவருக்கும் தெரிவிக்காமல், அந்த இணையதளத்தினை பார்க்க விரும்புகிற இணையப் பயனாளர்களுக்கும் சொல்லாமல், தணிக்கை செய்துவிடத் துடிக்கிறது இந்திய அரசு. அதற்காக “சுய கட்டுப்பாட்டு சட்டம்” ஒன்றினை இயற்றத் துடித்துக் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்தியா டைம்ஸ், பேஸ்புக், கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவ னங்களையே அவர்களது இணையதளங்களில் அவர்களையே தணிக்கை செய்யுமாறு நிர்ப்பந்தித்து வருகிறது இந்திய அரசு. அந்தந்த இணையதள நிறுவனங்களே தணிக்கையை செய்து விட்டால், அரசிற்கு வேலைப்பளு குறையும் என்பதும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபலின் கருத்தாக இருக்கிறது. குடிமக்களின் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக் கும் தடைவிதிக்க அரசிற்கே உரிமையில்லை என்கிறபோது, சில தனிமுத லாளிகளிடத்தில் ஒப்படைக்க நினைக்கிறார் கபில்சிபல்.

புறவாசல்வழியாககொண்டுவரப்படும்தணிக்கைச்சட்டம்(52(1)பிரிவு):

அரசிற்கு பிடிக்காதவற்றையெல்லாம் இணையத்தில் தணிக்கை செய்யும் சட்டத்தினை நேரடியாக நிறைவேற்றாமல், மறைமுகமாக காப்புரிமைச்சட்டம் என்கிற பெயரில் மாநிலங்களவையில் கொண்டு வந்திருக்கிறார் கபில்சிபல். இச்சட்டப் பிரிவின்படி, ஒரு இணைய தளத்தையோ அல்லது அதன் பகுதியையோ நீக்க வேண்டி யாரேனும் இணைய நிறுவனத்திற்கு விண்ணப்பம் அனுப்பினால், அதனை எவ்வித விசாரணையுமின்றி, இணைய நிறுவனம் அவ்விணையதளத்தினை இணையத்திலிருந்தே நீக்கலாம். தவறுதலாக விண்ணப்பம் அனுப்பியவருக்கு எந்த விதமான தண்டனையும் இல்லை. ஆனால், இணைய தளத்தை நீக்காவிட்டால், இணைய நிறுவனத்திற்கு தண்டனை உண்டு. இது நிச்சயமாக இணையத்தை ஒரு குழப்பமான நிலைக்குத் தான் கொண்டு செல்லும். யார் வேண்டுமானாலும் இணையத்தில் இருந்து எதனை வேண்டுமானாலும் நீக்கலாம் என்றாகிவிடும். எவரொருவரும், ஒரு இணையதளத்தில் இருக்கும் எதனையும் ஆதாரமே இல்லாமல், தனக்கு சொந்தமானது என்று கோரிக்கை வைத்து அதனை நீக்க வைத்து விடமுடியும். இச்சட்டத்தின் மூலம், ஒட்டுமொத்த இணையமே உபயோகமற்றதாக மாறி விடும் என்பது தான் அதிர்ச்சியான தகவல்.

சரி இதனால எனக்கு என்ன ? நான் பெரிய எழுத்தாளர் இல்ல. யாரை பத்தியும் நான் இழிவா பேசமாட்டேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா அப்படி இல்லைங்க உங்களுக்கும் பிரச்சன இருக்கு. உதாரணமா ஒரு படம் பாக்குறிங்க நல்லா இல்ல. உங்க நண்பர் எஸ்.எம்.எஸ்’ல படத்த பத்தி கேக்குறாரு, நல்லா இல்லன்னு நீங்க பதில் அனுப்புறீங்க. இத உங்க நண்பர் எல்லாருக்கும் அனுப்புகிறார். இந்த கருத்து என்ன காயபடுத்திருச்சுனு அந்த படத்துல சம்பந்தப்பட்ட யாராவது புகார் குடுத்தாங்கன்னா, நீங்க அவ்ளோ தான். இது தாங்க சுருக்கமா சொன்னா பிரச்சன.

மன்னராட்சி, காலனிய ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்று பல்வேறு விதமான கொடுங்கோல் ஆட்சிகளுக்கும் எதிராக பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்றதுதான் இன்றைக்கு இருக்கிற பேச்சுரிமையும், கருத்துரிமையும். அதனை மீண்டும் பறிக்க முயல்கிற இச்சட்டங் களை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்று பட்டு குரலெழுப்ப வேண்டிய நேரமிது.


Regards,
Arun Prakash

fsftn.org

 

 

%d bloggers like this: